Thursday, July 18, 2013



சில ஒலியியல் திரிபுநிலைகள்


      தமிழில் ள் – ண் - ட் என்பவை இனத்தால் ஒன்றானவை. அவை ஒன்று மற்றொன்றாகத் திரிபுறும் தன்மைகொண்டவை. இந்தத் திரிபுநிலை சமற்கிருதத்திலும் காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக ஆறு என்னும் எண்ணைக் குறிக்கும் ‘ஷண்’ என்னும் சொல் ‘ஷட்’ எனவும் ‘ஷ்ஷ்’ எனவும் திரிபுறுவதைக் கூறலாம்.

சமற்கிருதச் சொற்கள் தமிழில் புகுத்தப்படும்போது அவற்றின் ஒலிக்கும் தமிழ் ஒலிக்கும் நெருக்கமும் உறவும் பார்த்த நிலையில்தான் ஒலித்திரிபாக்கம் செய்யப்பட்டுவந்துள்ள மரபு நமக்கு விளக்கமளித்து நிற்கின்றது.

அவ்வகையில் ‘ஷ்’ என்னும் சமற்கிருத ஒலி தமிழில் ‘ட்’ என்று திரிபுபெறுவது மரபார்ந்த ஒன்று. அதன்படியே சமற்கிருதத்துக்கு உள்ளேயும்கூட ஒலித்திரிபாக்கம் அமைந்திருக்கின்றது. அதற்கு மேற்சொன்ன ‘ஷண் – ஷட் - ஷ்ஷ்’ என்பவை பலருக்கும் எளிதில் புரியக்கூடிய நற்சான்று.

ஷண் -     ஷண்முகம் – ஷண்மதம் – [ மெல்லினத்தின் முன் ‘ண்’ என்னும் மரபு]

ஷட்  -     ஷடாங்கம் – ஷடாந்தம் - ஷடா‡ரம் – ஷடானனன் [ உயிர்முன் ]
            ஷட்பதம் – ஷட்பாவம் –  [வல்லினத்தின் முன் ‘ட்’ என்னும் மரபு]
            ஷட்கோணம், ஷட்கர்மம்

ஷ்ஷ்   -     ஷஷ்டி – ஷஷ்டியப்தம் –

[ மெய்பிறிது ஆதால் என்னும் தமிழ் இலக்கண ஒழுங்கு இதேபோல சத்புத்திரம், சத்குணம், சித்சக்தி, ... என்பவற்றில் வருமொழிக்கு ஏற்ப மெய்வலித்தல் என்று இருப்பதும், சங்கலபம், சங்கரம், சன்மார்க்கம், சன்மானம், சின்முத்திரை, சின்மயம் என்பவற்றில் மெய்மெலித்தல் என்று இருப்பதும், சச்சிதானந்தம், நிச்சிந்தை, நிச்சுவாசம், வருமொழி முதலெழுத்துக்கு ஒத்துநிற்றல் (வந்ததொக்கல் – வந்தது ஒக்கல்) ] என்று இருப்பதும் ஒப்புநோக்கி உணரத்தக்கது.

விண் என்னும் சொல்லின் அடியாக எழுந்துள்ள விண்ணு என்னும் திருமாலைக் குறிக்கும் தமிழ்ச்சொல் சமற்கிருத மொழியில் ஒலித்தடம் இணங்கியதான நிலையில் விஷ்ணு என்றே திரிந்துள்ளது. தமிழில்கூட அது விண்டு என்றொரு வடிவினையும் பெற்றுள்ளதும் இந்த நெறிப்படித்தான்.

விஷ்ணு என்பதனை மறுதழுவலாகத் தழுவித் தமிழுக்குள் புகுத்திபோது ஆழ்வார்களும் பிறரும் விட்டுணு எனவும், விட்டு எனவும் திரித்தாண்டுள்ளனர். காண்க: பெரியாழ்வார் பெயர் விட்டுசித்தன்  (விஷ்ணுசித்தன்).

      தமிழில் புகுத்திக்கொள்ளப்பட்டுள்ள மகிடன் என்னும் சொல் மகிஷாசுரன் ஆகிய மகிஷன் என்பதன் திரிபாக்கமாகும். அது மேலும் மகிடன் > மயிடன் எனவும் திரிபு பெற்றுள்ளது. மயிடற்செற்றாள் என்பது அவனை அழித்த துருக்கையின் (துர்க்கையின்) பெயர்.

      மகிஷன் > மகிடன் > மயிடன் என்று செல்கின்ற திரிபாக்க முறைக்கு ஒத்ததாக சிவோகம் என்னும் சமற்கிருதச் சொல்லின் போக்கும் அமைந்துள்ளது.

      சிவோ + (அ)ஹம் > சிவோஹம்
[ மனம் என்பது மனோ என்று திரிக்கப்பட்டுள்ள முறையில்
 சிவம் என்பது சிவோ என்று திரிக்கப்ட்டுள்ளது.]

      சிவோஹம் > சோஹம் [ சி + வோ > சோ என ஒரே நெடிலாகியிருக்கிறது.]

      சோஹம் > சோகம் > சோயம் [ ஹ > க > ய ] என்று தமிழில் உள்ள சமயமத மெய்யியல் நூல்களில் திரிக்கப்பட்டுள்ளது. இதில் மேற்சொன்ன மகிடன் > மயிடன் [ கி > யி ] என்பதன் போக்கில் சோகம் > சோயம் [ க > ய ] என்பதும் அமைந்திருக்கக் காணலாம்.

      உயிரொலியைக் கொண்டு முடிகின்ற உயிர்மெய் எழுத்துகள் அதே உயிரொலியில் தொடங்கிவரும் சொல்லோடு இணைந்து நெடிலாகிவிடுகின்றன. இது தமிழில் சிறுபான்மையாக உள்ளது. ஆனால், சமற்கிருத மொழியிலோ பெருவழக்குப் பெற்றதாக உள்ளது.

      எடுத்துக்காட்டாக சாஷ்டாங்கம் என்னும் சொல்லைப் பாருங்கள். அதனைப் பொருள்படப் பிரித்துப்ப பார்த்தால் ச + அஷ்ட + அங்கம் > சாஷ்டாங்கம் என்று அமையும்.

      ச + அஷ்ட(ம்) என்பது முதற்கட்டப் புணர்ச்சி. இதிலே ‘அ’ எனும் உயிரொலியில் முடிகின்ற ‘ச’ உடன் ‘அ’ எனும் உயிரொலியில் தொடங்குகின்ற
‘அஷ்ட’ என்னும் சொல் புணர்கிறது. அதன்படி ‘ ச(ச் + அ) + அ ’ என்னும் இரண்டு அகரக் குறில் எழுத்துகளும் புணர்ந்து ‘சா(ச்ஆ)’ என் ஒரே ஆகார நெடில் எழுத்தாக மாறியுள்ளன.

அடுத்து நிகழ்ந்துள்ள இரண்டாம் கட்டத்துப் புணர்ச்சி ‘சாஷ்ட + அங்கம்’ என்பதாகும். இதிலும் மேற்சொன்னபடி, இரண்டு குறில் எழுத்துகள் ( ட + அ) புணர்ந்து ஒரே நெடிலாகி இருக்கின்ற உண்மையைப் பாருங்கள். [ எ-டு: உப + அங்கம் > உபாங்கம், சாங்கம் (ச + அங்கம்) + உபாங்கம் > சாங்கோபாங்கம், மன + அதீதம் > மனாதீதம், ... ]

      இந்த அமைப்பில் தமிழில் காணப்படும் சொற்கள் சிறுபான்மை. எடுத்துக் காட்டாக பண்டகம் [பண்ட + அகம்], வட்டாட்சி [வட்ட + ஆட்சி], ... போன்றனவாகும்.

      இவ்வகையில் அமைப்புற்றுள்ள பல சொற்கள் தனித்தனியாக நிற்கையில் முழுத்தூய தமிழ்சொற்களாகவும், புணர்த்திய நிலையில் நிற்கையில் அவை வடசொல்லாகவும், சமற்கிருதச் சொல்லாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக உத்தரம், தக்கணம், அயணம் என்பவை தனித்தமிழ்ச் சொற்கள்.

இவை கூட்டுச்சொல்லாகும் போது உத்தர அயணம், தக்கண அயணம் என்று அமைந்திருக்கும் போது தமிழ்ச்சொற்களாகின்றன. ஆனால், உத்ராயணம் - [ உத்தர + அயணம்], தக்கணாயணம் (த‡ணாயணம்) - [ தக்கண அயணம் ] என்று அமைந்திருக்கும் போது அவையே சமற்கிருதச் சொற்களாக – சொல் வழக்குகளாக மாறிவிடுகின்றன.

      உண்மையில் பார்க்கப்போனால், இஃது தமிழுக்கும் சமற்கிருதத்துக்கும் ஓர் எல்லைக் கோடாகவும் இருக்கிறது. தமிழுக்கும் சமற்கிருதத்துக்கும் உரிமைப் போராட்டமாக இருந்துவருகின்ற பல சொற்களை இவ்வாறு நடுநின்று எல்லை பிரித்துவிடலாம்.

      அவ்வாறு பிரித்த பின்னர், ஏனையவற்றை இருமொழிக்கும் உரிமையுள்ள பொதுச்\சொற்களாகக் கொள்ளலாம். அதற்கு, சிவாலயம் [ சிவ + ஆலயம் ], சமாதி [ சமம் + ஆதி ], ... போன்றவற்றைக் கூறலாம்.

      சமம் + ஆதி > சமாதி என்பது வடசொல், சமற்கிருதச் சொல் அன்று. இவை வடதமிழின் வழிவந்த வடதிரவிடக் கிளைப்புகளாகி நிற்கின்ற பாலி, பிராகிருதம் போன்ற மொழிகளுக்கு உரியவை; வடதமிழுக்கு உட்பட்டவை.

No comments:

Post a Comment