Saturday, July 13, 2013







பொங்கல் விழா
நமக்கு என்ன கற்றுத்தருகிறது?

      உலகம் எங்குமே மாந்த இன வரலாற்றில் விலங்குகளைப் போல, பறவைகளைப் போல இயற்கையாக ஆங்காங்குக் கிடைத்த உண்பொருள்களைத் தேடிப்பெற்று உண்டு உயிர்வாழ்ந்த காலம் ஒன்று இருந்துள்ளது.

      அந்த நிலையிலிருந்து மாறி; பிற உயிர்களைச் சூழ்ச்சியினால் வேட்டையாடிக் கொன்று; உணவுப்பொருளாக உண்டு; உயிர்வாழ்ந்த காலம் ஒன்றும் அதற்குப் பின்பு இருந்துள்ளது.

      உணவுக்காக அலைந்து திரிகையில் ஏற்பட்ட பல்வேறு சொல்லொணாத உயிர்த்துன்பம் உளத்துன்பம் உடற்றுன்பம் எனப் பலதரப்பட்ட துன்பநிலைகளிலிருந்து பட்டறிவுபெற்றுப் படிப்பினைகள் பெற்று மனந்தெளிந்து வந்த நிலையில்தான், அகத்து உறுப்பாகிய அன்பு என்பதன் வழியாக உலகத்தின் இயங்குநிலைகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டனர்.

      அதன் பயனாகத்தான், உழைத்து உண்பது என்னும் முடிவுக்கு வய்துள்ளனர். அதிலுங்கூட பிற மாந்தரையும் பிறபிற உயிரிகளையும் வருத்தாமல், வஞ்சிக்காமல் வாழ்வது என்னும் குறிக்கோள்பட்டுத் திடங்கண்டனர். அதற்குக் கைகொடுத்த அறிவார்ந்த தொழில்தான் – தொழிலாக்கம்தான் உழவுத்தொழில் ஆகிய பயிர்த்தொழில்.

      பயிர்த்தொழில் செய்து பெற்ற பற்பலவான விளைச்சல் வகைகளையெல்லாம் உடனே உண்ணத் தொடங்காமல், அவற்றைப் பெறுவதற்கு உறுதுணையாக விளங்கித் தாங்கிநிற்கின்ற இறைவனுக்கும் கதிரவனுக்கும் உடனுழைத்த எருது முதலான உயிரிகளுக்கும் ஏனையோருக்குமாக நன்றி தெரிவித பின்னரே பயன்கொள்ளத் தொடங்கினர்.

      அந்த நன்றி புலப்படுத்தும் மனத்தூய்மையால் வந்த வினைத்தூய்மையின் பயனாகக் கிடைத்த விளைபொருள்வளத்தைச் சமைத்துப் பொங்கலாகப் படைத்தனர். இறைவனுக்கும் பிற உயிரிகளுக்குமாகப் படைத்த பின்னரே பிறருக்கும் அதன் பிறகே தமருக்கும் உண்ணத் தந்தனர்.

      பொங்கல் விழா நமக்கு என்ன கற்றுத்தருகின்றது? யாரையும் எந்த உயிரையும் வஞ்ஞ்சிக்காமல் வதைக்காமல் உழைத்து வாழ வேண்டும் என்ற அடிப்படையான ஆன்மநேயப் பாடத்தைக் கற்றுத்தருகின்றது. மாந்த நிலையில் மட்டுமே சிந்திக்காமல், மாந்தரையும் உள்ளிட்டு விளங்குகின்ற அனைத்துயிர் நிலையாகிய ஆன்மநிலையிலும் பொங்கல் நம் அறிவினையும் உள்ளத்தினையும் விரியச்செய்கின்றது அல்லவா? ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் என்பது தமிழ்மறைத் திருமொழி. வள்ளல்பெருமானார் உண்மை அறச்சாலை (சத்திய தருமச்சாலை) அமைத்த காரணம் என்ன?
      எப்படிப்பட்ட மாந்தராக இருந்தாலும்கூட அவருக்குப் பசி என்ற ஒன்று வயிற்றுக்கு உள்நின்று உடற்றுகின்ற போது, அவர் முகத்திலும் அகத்திலும் பொலிந்துகொண்டிருந்த உயிர்க்ளை குன்றி ஒடுக்கமுற்றுச் செயலற்றுப்போகின்றது அல்லவா? அந்த நிலையில் அவர்களுக்குத் தக்கபடியாக உணவு அளிக்கப்பெறும்போது அவர்களிடத்தில் மீண்டும் இழந்துபோன அந்த உயிர்களை தளிர்க்கக் காண்கின்றோம் அல்லவா?

இதனால்தான், மாந்தராகட்டும் மற்று எந்த உயிரியாகட்டும் எல்லார்க்கும் பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும் என்பது மறுக்க முடியாத இயற்கை உண்மையாக இருக்கிறது. இப்படியாக ஒட்டுமொத்த ஆன்மத்திரள் முழுவதுக்கும் யாதொரு வேறுபாடுமின்றி ஏற்படுகின்ற பசி என்ற ஒன்றின் கொடுமையை உணர்ந்து அறிந்தவர்கள் உலகத்தில் முதற்கண் ஆற்றுவிக்கத் தக்கது பசியே என்றும், அத் உயிர்கெல்லாம் உண்டாகின்ற பொதுப்பிணி என்றும், அதனை ஆற்றுவிப்பவர்கள் பசிப்பிண மருத்துவர்கள் எனவறும் சான்றோர்கள் ஒன்றாக ஒருசேரநின்று உலகெங்கிலும் கருத்துரைக்கின்றார்கள்.

எனவேதான், பொங்கல் விழா என்பதன் வேர்நிலையாகப் பசியாற்றுவித்தல் என்னும் அறத்தினுள்ளு எல்லாம் தலையாய அறக்கூறு முதற்றி நிற்கின்றது.றினி, அத்தகைய கொடுமையார்ந்த பசியினை ஆற்றுதற்காக வழங்கப்படுகின்ற உணவு என்பது அதனை உண்பவர்களுக்குத் தீங்கு தராத – ஏற்படுத்தாத நிலையினதாக இருப்பது மிகமிக இன்றியமையாத அருட்கூறு.

இந்த அருட்சிந்தனையோடு உணவுப்பொருள்களை உண்டாக்கித் தருபவர்களும் இடைநின்று அவற்றை எல்லார்க்கும் வணிகமுறையில் சேர்ப்பிக்கின்றவர்களும் இயங்குவது ஒன்றே போதும். அவர்களுக்குப் புண்ணியம் தேடுகின்ற பிற சடங்குத்தனமான தானங்களும் தருமங்களும் எனப்படுகின்ற புற முயற்சிகள் எதுவும்கூட வேண்டாம்.

உணவு நிலையில் கண்டறியப்பட்ட இந்த அடிப்படையான ஆன்ம அறத்தாறு என்பதே மற்று உள்ள எந்த தொழில்நிலையிலும் பின்பற்றத்தக்க பேரறப் பெருஞ்செயலாகும். இதற்கு உடன்படாத மத ஒன்றேனும் உளதோ? இல்லை என்க. மற்று யாரேனும் உளரோ எனில் ஆழ்மனத்து நிலையிலிருந்து கூறுவதானால் இல்லை என்றே விடையாக இருக்கின்றது. ஆனால், பொருளாசையாலும், மற்றுமற்றுள்ள பேராசை வகையாலும்தான் மக்கள் நிலைபிறழ்ந்து போகின்றனர்.

ஆதலால், பொங்கல் விழா என்பதே உண்மையான அனைத்துலக அனைத்துயிர் அறத்திருவிழா. அதனைக் கொண்டாட மறுப்பத்தற்கு யாதொரு காரணமும் இல்லை. உயிரியக்கம் நிகழ்ந்திருப்பதற்கு என உண்பதும் உண்பிப்பதும் எத்துணை இன்றியமையாத அறத்தகைமை சான்றவை என்பதை மேற்சொல்லி வந்துள்ள காரணக் கூறுகளைக் கொண்டு சிந்திக்கின்ற ஈவு இரக்கமுள்ள எவருக்கும் பொங்கல் விழாவைத் தவிர்ப்பதற்கோ தவறு சொல்வதற்கோ தடுப்பதற்கோ மனம் வருமா?

No comments:

Post a Comment